வேலூர்: கணியம்பாடியில் உப்பு ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டீசல் டேங்க் உடைந்து தீப்பற்றியதில் லாரி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி, இன்று (ஜூன் 22) அதிகாலை ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது லாரியின் டயர் வெடித்தலில், கணியம்பாடி அரசுப் பள்ளி அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, லாரியின் டீசல் டேங்க் உடைந்து தீப்பற்றியது. இதில், தீ மளமளவென பரவியதில் லாரி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.லாரியின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ணமங்கலம் தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கணியம்பாடி போலீசார், சாலையில் நடுவே நின்றுக்கொண்டிருந்த லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதனால் ஆரணி - வேலூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர். தற்போது லாரி எரிந்து சேதமடைந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.