நீலகிரி: கூடலூர் குடியிருப்பு பகுதிகளில் ஒற்றை காட்டு யானை உலா வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால், வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இன்று (ஜூன் 14) குனில் மேலப்பள்ளி கிராம பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்துள்ளது. இதனை பார்த்த விவசாயிகள் சத்தம் போட்டு யானையை விரட்டியுள்ளனர்.தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் யானை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, வனப்பகுதி எல்லையில் அகழியை மூடிய மண்ணை அகற்ற வேண்டும், மின்வேலியை சீரமைக்க வேண்டும், தற்காலிக எச்சரிக்கை ஒலி சாதனங்கள் அல்லது வனக்காவலர் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மக்கள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, தினமும் பறக்கும் படை கண்காணித்து வருகின்றனர். பலாப்பழங்களை தேடி யானைகள் குடியிருப்புக்குள் வருவதால், மரங்களில் தாழ்வான பகுதியில் உள்ள பலா காய்களை வெட்டி அகற்ற வேண்டும். குடியிருப்பு பகுதியில் யானைகளை கண்ட உடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யானைகளை விரட்டுவதற்கான செயல்களில் ஈடுபடக்கூடாது என வனத்துறை அறிவுரை வழங்கியுள்ளனர்.