நீலகிரி: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுத்து வருகின்றன. குறிப்பாக காட்டு யானைகள், மனிதர்களுடன் நேரடி தொடர்புக்கு வரக்கூடிய சூழ்நிலை உருவாகி வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.இந்த நிலையில், ஊட்டி அருகேயுள்ள லவ்டேல் பகுதியில் காட்டு யானைகள் உணவுப் பண்டங்கள், பழவகைகள் மற்றும் காய்கறி கழிவுகள் கொண்ட குப்பைத் தொட்டியில் நெடுநேரம் உணவுகளை தேடிக் கொண்டிருக்கு்ம் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.அந்த வீடியோவில் யானை குப்பைத்தொட்டியில் இருந்த குப்பைகளை வெளியே இழுத்து, உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து உண்ணும் காட்சிகள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த காட்சி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும், வனத்துறை அதிகாரிகளிடமும் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசிக்காக உணவு தேடி வந்த யானை குப்பைத்தொட்டியில் உணவு தேடும் அவலநிலை வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பிளாஸ்டிக் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த கழிவுகளை யானைகள் உட்கொள்ளும் போது, அவற்றின் உடல் அமைப்புக்கு தீங்காக மாறும். மேலும் உணவுக் குழாய்கள், ஜீரண உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு யானை உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Category
🗞
News