நீலகிரி: உதகையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரடி ஒன்று, வீட்டின் மேல் தளத்தில் விளையாடும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.65 சதவீத வனப் பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டம், மான், கரடி, சிறுத்தை, காட்டு மாடு, புலி, யானை, போன்ற பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதில், குறிப்பாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.இந்த நிலையில், உதகை அடுத்த லவ்டேல் கெரயா குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று (ஜூன் 18) ஒற்றைக் கரடி புகுந்துள்ளது. இதில், வீட்டின் மாடிப்பகுதியில் உலா வந்த கரடியை, அப்பகுதியில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். தொடர்ந்து, பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டதால் கரடி அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.கரடி மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதற்கு வாய்புள்ளதால், கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், கரடி நடமாட்டம் குறித்து வனத்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கரடி கண்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.