விழுப்புரம் : பாமகவில் இருக்கக்கூடிய நெருக்கடியால், அரசியலே வேண்டாமென மன உளைச்சலில் உள்ளோம். மிகப்பெரிய நெருக்கடியாக உள்ளது என பாமக எம்.எல்.ஏ அருள் தெரிவித்துள்ளார்.பாமகவில் உட்கட்சி குழப்பம் தீவிரமடைந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸை சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் இன்று (மே.30) நேரில் சந்தித்தார்.முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ. அருள், “பாமகவில் இருக்கக்கூடிய நெருக்கடி நிலையில், அரசியலே வேண்டாமென மன உளைச்சலில் உள்ளோம். மிகப்பெரிய நெருக்கடியாக உள்ளது. தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி. பாமக எத்தனையோ நெருக்கடியை கடந்த இயக்கம். அதனால், இந்த நெருக்கடியையும் கடந்து வருவோம். தைலாபுரம் எங்களுக்கு கோயில், மருத்துவர் ராமதாஸ் எனக்கு கடவுள். அதனால், எனது தெய்வத்தை பார்க்க வந்திருக்கிறேன். மருத்துவர் ராமதாஸை சந்திப்பதற்காக இன்று வந்திருக்கிறேன்” என்றார்.தொடர்ந்து, எம்.எல்.ஏ. பதவியை தாம் ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லவே இல்லையே” என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.