திருப்பத்தூர்: வாழைக்காய் லோடு ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மற்றும் அருகில் இருந்த கார் மீதும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஆம்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு (ஜூன்23) ஒரு பயங்கர விபத்து நடந்தது. ஆந்திராவில் இருந்து ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியிற்கு வாழைக்காய் லோடு ஏற்றி வந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தறிகெட்டு ஓடிய லாரி சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மற்றும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் தனியார் உணவகத்தில் காவலாளியாக பணியாற்றும் பிராங்ளினின் கால் பாதங்கள் துண்டாகி படுகாயம் அடைந்தார். மேலும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கால்வாயில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் காவல்துறைக்கும், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விபத்தில் சிக்கிய பிராங்ளின் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.பின்னர், ஆம்பூர் நகர காவல்துறையினர் விபத்துக்குள்ளான லாரி மற்றும் கால்வாயில் கவிழ்ந்த காரை கிரேன் மூலம் மீட்டு, அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.