திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரிலிருந்தது 2 கி.மீ தொலைவில் உள்ள ஞானதாஸ் நகரில் உள்ளது வீட்டுடன்கூடிய ஜெயராஜின் தோட்டம். சாத்துக்குடிப் பழங்களைப் பறித்துக்கொண்டிருந்தவரை, ஒரு காலை நேரத்தில் சந்தித்தோம். நம்மை வரவேற்றவர், ‘‘முதல்ல இதைக் குடிங்க... அப்புறம் தோட்டத்துக்குள்ள போவோம்’’ எனச் சொல்லிச் சாத்துக்குடி ஜூஸைக் கையில் கொடுத்தார். தித்திப்பான ஜூஸைக் குடித்தோம். ‘‘வாங்க... இப்போ தெம்பாத் தோட்டத்துக்குள்ள போகலாம்’’ என்றவர், தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார். இதமான சாரல் காற்றில், மரங்களில் கொத்துக் கொத்தாகக் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தன சாத்துக்குடிப் பழங்கள்.