பொறியியல் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த ஆனந்த், இப்போது நாட்டுக் காய்கறி, கீரை விதைகளைச் சேகரிக்கும் மனிதராக மாறியிருக்கிறார். இயற்கை உணவு தானியங்கள், சிறுதானியங்களை இந்தியா முழுக்க விற்பனை செய்துகொண்டிருக்கிறார். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் இருக்கும் வாலவந்திநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். நாமக்கல் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் ‘உழவர் ஆனந்த்’ என்ற பெயரில் இயற்கை அங்காடி மற்றும் இயற்கை விதை விற்பனைக் கூடத்தை நடத்தி வருகிறார். விதை வாங்க வந்திருந்த இயற்கை ஆர்வலர் ஒருவரிடம், விதைகளின் தரம், மேன்மைகள் குறித்து விளக்கிக்கொண்டிருந்த ‘உழவர்’ ஆனந்தை சந்தித்துப் பேசினோம்.