நிலம் நீர் நீதி: நிரம்பின ஏரிகள்...துளிர்த்தன பயிர்கள்...பொங்கும் நன்றிகள் | Vikatan TV

  • 3 years ago
‘பூமியின் நரம்புகள் ஆறுகள்தான். அவைதான் பாசனத்தின் ஊற்றுக்கண்கள்’ என்பார்கள். ஆனால், தமிழ்நாட்டைப் போன்ற மழை மறைவு பிரதேசங்களுக்கு ஏரிகள்தான் நீராதாரத்தின் ஊற்றுக்கண்கள். குடிநீருக்கும் சரி, விவசாயத்துக்கும் சரி ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள்தான் மிகமுக்கிய நீராதாரங்களாக இருக்கின்றன. 2015-ம் ஆண்டு சென்னையைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்துக்குக்குக் காரணமே... இத்தகைய நீர்நிலைகளைச் சரிவர பராமரிக்காமல் விட்டதுதான். இதை உணர்ந்து, ஏரிகளைச் சீரமைக்கும் பணிகளை ‘நிலம் நீர் நீதி!’ என்கிற பெயரில் விகடன் முன்னெடுத்தது. அப்போது, ஓடோடி வந்து கைகோத்தவர்கள் விகடன் வாசகர்களே. ஆம், அன்று வாசகர்கள் அள்ளிக்கொடுத்த ஒரு கோடி ரூபாயுடன், விகடன் நிறுவனத்தில் அறத்திட்டப் பணிகளுக்காக இயங்கிவரும் வாசன் அறக்கட்டளையும் தன் பங்குக்கு ஒரு கோடி ரூபாயைச் சேர்த்தது. இதையடுத்து, நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகள் வேகமெடுத்தன. அதன் பலனாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இப்போது மூன்று ஏரிகளில் நீர் நிரம்பி கடல்போல காட்சியளிக்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் ஏரி, சாலமங்கலம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி மற்றும் அம்மன் குளம் ஆகியவை தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது 71 ஏக்கர் பரப்பளவு கொண்ட நரியம்பாக்கம் ஏரி. 1.3 கி.மீ தொலைவுக்கு நீண்டிருக்கும் இதன் கரையைப் பலப்படுத்தியதோடு உயர்த்தியும் கொடுத்திருக்கிறோம். 8 அடி உயரமாக இருந்த கரை, 12 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஏரியின் கரையில் உள்ள மண் ஒருவகையான பொறை மண். எளிதில் மண்அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், கரைக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், உள்பக்க கரையில் கான்கிரீட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக வெளுத்து வாங்கிய கனமழையையும் தாக்குப்பிடித்துத் தெம்பாக நிற்கிறது ஏரியின் கரை. நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு நிகழாதவாறு எதிர்க்கரை அமைக்கப்பட்டு, பனைமர விதைகளும் விதைத்திருந்தோம். அவை, இப்போது முளைத்து வளர்ந்திருக்கின்றன. ஏரிக்குள் தண்ணீர் செல்லும் கால்வாய்களில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டிருப்பதால், தண்ணீர் தங்குதடையின்றி பாய்கிறது.

CREDITS
Reporter - P.Rakesh & Kannan

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended