#BOOMINEWS | திருவாரூரில் பாஜக பிரமுகர் வீட்டில் மர்ம நபர் கற்கள் வீசி தாக்குதல் |
  • 3 years ago
திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட மடப்புரம் எடத் தெருவில் வசித்து வரும் தீவிர பாஜக செயற்பாட்டாளரும், வாசன் பில்டர்ஸ் உரிமையாளருமான பொறியாளர் நாகராஜன் என்பவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த பத்து வருடங்களாக அதிமுகவில் செயல்பட்டு வந்த நாகராஜன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் அவரது வீடு இருக்கும் பகுதியில் உள்ள தெரு விளக்கை அணைத்துவிட்டு மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து கற்களை கொண்டு அவரது நான்கு சக்கர வாகன கண்ணாடி மற்றும் அலுவலக கண்ணாடியை கற்கள் வீசி உடைத்துள்ளார். கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரைக் கண்ட அந்த மர்மநபர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். அவரைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மர்ம நபர் முகத்தை துணியால் மூடி இருந்ததாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நாகராஜன் கூறுகையில் என்னையும் எனது மகனையும் கொலை செய்யும் நோக்கத்திலும், அச்சுறுத்தும் நோக்கத்திலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்து சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்த நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து,அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்லது முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்கிற அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended