சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை
  • 6 years ago
கோவையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை உள்பட நான்கு பேருக்கு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (57). இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவரது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2015ம் ஆண்டு 4ம் வகுப்பு படித்து வந்தார். ஏசுதாஸ் கூலி வேலைக்குச் சென்று வந்தார்.அப்போது வீட்டில் தனியாக இருந்த தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (19), பாலன் என்கிற பாலகிருஷ்ணன் (33), ரவிக்குமார் என்கிற ஸ்டேன்லி (27) ஆகியோரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்த சிறுமி, பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்தார். அவர்கள் குழந்தைகள் உதவி மையமான சைல்ட் லைன் மற்றும் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் (கிழக்கு) பிரிவுக்கும் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் ஏசுதாஸ், பிரேம்குமார், பாலகிருஷ்ணன், ஸ்டேன்லி ஆகியோர் மீது குழந்தைகள் பாலியல் தாக்குதல் தடுப்புச் சட்டம் (போஸ்கோ) பிரிவில் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி அல்லி தீர்ப்பு வழங்கினார். இதில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்தத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.





Coimbatore court convicts 4 members for life imprisonment. The 4 were given sexual torture to the 10 years old girl. Among the 4, girl's father also convicted.
Recommended