திருச்செந்தூரில் சுப்ரமணியசாமி கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் ஏராளமான பக்தர்கள் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து கோவில் நடை அடைக்கப்பட்டது. அறுபடை முருகன் கோவிலில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தினசரியும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து வந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம். இன்று பாதையாத்திரையாக வந்த பக்தர்கள் முருகன் கோவில் பிரகாரங்களில் தங்கி இளைப்பாறியிருந்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் நீண்ட பிரகாரங்களைக் கொண்டது. வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த மண்டபம் இன்று காலையில் திடீரென்று இடிந்து விழுந்தது.
பிரகாரத்தில் ஒய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்கள் உள்ளே சிக்கினர். இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை. பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர்
கட்டிட இடிபாடுகளுக்குள் பக்தர்கள் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. அங்கு கோவில் நிர்வாகிகள் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.