திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணிதப் பாடம் கற்பித்தார். ஆம்பூர் அடுத்த மேல்சாணாங்குப்பம் ஊராட்சியில் நேற்று ’உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேல்சாணாங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள சொத்து வரி, குழாய் வரி ஆகியவற்றை விரைவில் வசூலிக்க ஊராட்சி செயலாளருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நியாய விலைக்கடையில் ஆய்வு செய்த ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்புகள் குறித்து விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து மேல்சாணாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பாப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சென்று மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு கணிதப்பாடம் கற்பித்தார். மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிராம நிர்வாக அலுவலகத்திலும் ஆட்சியர் ஆய்வு மேற்க்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியருடன் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.